இணைந்து உலகை நேசிப்போம் | கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ சே. அப்துல் லத்தீப் | April 2025


நோன்பை நோற்கிறோம் நல்ல அமல்களை  

நொடியும் விடாது ஏற்கின்றோம் – அதன்  

நூறு கோடியாம் நன்மை நமக்குள் 

நுழைந்து வருவதைப் பார்க்கின்றோம்! 


காண்போம் இறைவன் கருணை அனைத்தையும் 

கண்ணின் முன்னே ரமலானில் – அது 

கற்பனைக்கு அப்பால் விரிந்து தோன்றும் 

கடலும் சிறிதாய் மனந்தன்னில்! 


அல்லாஹ் நமக்கு எல்லாம் தருவான்  

அதனால் துளியும் கவலை இல்லை – அவன்  

அருட்கொடை என்றும் அணைத்துக் காக்கும்  

அகிலத்து எதுவும் ஈடில்லை! 


வல்லான் வகுத்த வழியினிலன்றி வாய்க்காது எதுவும் யாருக்கும் அவன் வழங்க 

நினைத்ததைத் தடுக்கும் வலிமை 

வருமோ வேறு யாருக்கும்?


சொல்லால் அவன்புகழ் சொல்லின்

 உலகின் சொற்கள்அனைத்துமே

 போதாது இச் சூழ்புவிமக்கள் இணைந்து 

சொல்லினும் இருக்கும் வாழ்நாள் போதாது.


எல்லாம் கூறிடும் இனியமறையை

இதயம் நிறைந்து ஓதிடுவோம்- இனி

என்றும் எங்கும் அமைதி இன்பம்

எல்லாஉயிர்க்கும் சூட்டிடுவோம்.

- கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ சே. அப்துல் லத்தீப். 

Published in Nagore Puranam April month magazine 2025


Post a Comment

0 Comments