தந்தை அவன் பத்து நிமிடத்தில் உயிர் கொடுக்க

தாய் அவள் பத்து மாதங்கள் சுமந்தெடுக்க,

பிறப்பது ஆணா பெண்ணா என்று தெரியாமல் இருவரும் பறிதவிக்க,

பிறந்தது ஆண் என்றால் கொண்டாடுவதும், பெண் என்றால் திண்டாடுவதுமாக பலர் இருக்க,

பிறப்பதற்கு முன்பே ஆண் செல்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிய பெண் செல்களைப் பிறந்ததற்கு பின்பு, ஆண்கள் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி சென்று கொண்டிருக்க,

பெண்கள் பிறக்கும் போது குழந்தையாக வளரும் போது ,சகோதரியாக பின்பு தாரமாக, தாயாக இறக்கும் போது மூதாட்டியாக ஆண்களால் பல இன்னல்களைச் சந்திக்க,

தனக்குக் கிடைத்த பல வாய்ப்புகளைச் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் ஆண்களின் சூழ்ச்சியினாலும் இழக்க,

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு, அதைப் போல பெண்களும் தனக்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்க,

அப்பப்பா என்னவென்று சொல்வது பெண்ணின் பெருமைகளையும், அருமைகளையும் கிடைத்த ஒரு வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி மருத்துவராக விஞ்ஞானியாக விமானியாக,அரசியல்வாதியாக ஆசிரியராக,காவலராக உருவெடுத்து பல துறைகளில் சாதித்து ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று நிரூபித்து கொண்டிருக்கின்றனர்.

ஆணிற்குப் பெண் அடிமை இல்லை என்றும், ஆணிற்கு பெண் நிகர் என்றும், பெண்ணுரிமைக்காக போராடும் அனைத்து பெண்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.

- பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்  

Published in Nagore Puranam March month magazine 2025