இந்தியாவின் உச்சநீதிமன்ற 53ஆவது நீதிபதியாக 23.11.2025 ல் பதவியேற்ற நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் 90000க்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இந்தியா முழுமையும் உள்ள நீதி மன்றங்களில் 4.6 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் நிற்பதாகவும் நினைவூட்டினார்.
நினைவூட்டியதோடு நில்லாது உச்ச நீதிமன்றத்தின் நிலுவை வழக்குகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக அறிவித்தார், அத்தோடு உயர்நீதி மன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைக்க முயற்சிப்பதாகவும் கூறினார்,
சொல்வது எளிது சொல்லிய வண்ணம் செயல்படும்பொழுது ஏற்படும் தடைகள் உடைக்கப்படுவதற்கு உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
அந்த முயற்சியில் இருபிரிவினரும் இணைந்து பேச முன்னுரிமை அளிப்பது தீர்வைத் திருப்திகரமாக்கும் எளிமையான வழி என்றும் இந்த வழிமுறை வழக்குகள் நீதிமன்றங்களில் வழிந்து தேங்காது வழியோடு தீர்க்கப்படும், விழி பிதுங்கி காசைக் காலத்தை வீணாக்கியோர் வழி கிடைத்து வாழ்வு பெறுவர் என்பதைச் சுருக்கி சொன்ன முறை சிறப்பானது,
தீர்ப்பை எளிதில் எட்ட முடியாத சட்ட சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை அடிப்படையில் அரசமைப்பு அமர்வுகளை அமைப்பது அரிய முயற்சி, உரிய பயனை உடனே தரும். எந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுமோ அந்த அளவில் அதையும் பயன்படுத்தலாம் என்பதும் காலத்திற்கேற்ற முன்னேற்ற சிந்தனை.
சமூக வலைதள நீதி தீர்வு விமர்சனங்கள் எல்லை மீறி எதிரும் புதிருமாய் பார்வையாளர்களைப் பைத்தியமாக்கும் போக்கை நீக்க வேண்டும் என்ற நீதிபதியின் கருத்தை அனைவரும் ஏற்க வேண்டும்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments