நற்றிணை | 01 & 03 பாடல் மற்றும் விளக்கம்

 


நற்றிணை (பாடல் -1)

திணை: குறிஞ்சி

எழுதியவர்: கபிலர்

தலைவி கூற்று

(தலைவனின் பிரிவைத் தலைவிக்குத் தோழி உணர்த்துகையில் தலைவியின் கூற்று இது)

பாடல் 01 :

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே’

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை;

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

பொருள் :

என் காதலர் சொன்ன சொல் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றும் என் தோள்களைப் பிரியாதவர்; குளிர்தாமரையின் தாதுக்களை ஊதி உயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில் வண்டு சேர்த்த தித்தித்தத் தேன் போல உயர்ந்தது அவர் காதல்; நீர் இல்லாமல் உலகம் இல்லை; அவர் இல்லாமல் நானில்லை! விரும்பி நேசிக்கிறார். என் நெற்றியில் படரும் பிரிவுத் துயர்(பசலை) பார்த்துப் பயப்படுவார்! தான் செய்வதை உணராது என்னைப் பிரிந்துச் சிறுமை அடைவாரோ!

(தலைவன் தன்னைவிட்டுப் பிரிய மாட்டான் என்பதே இதன் உட்பொருள்)

* * * * *

நற்றிணை (பாடல் - 300)

திணை: மருதம் 

எழுதியவர் : பரணர் 

பாடல் 300 : 

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்

மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,

உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்

தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்-

சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்

முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!

நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,

நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்

இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்

ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,

பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்

அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

பொருள் : 

நெய்வடிந்தாலொத்த பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தையுடைய பாணர் தலைவனே!; விளங்குகின்ற தொடியணிந்த அரசகுமாரி சினங்கொண்டவுடன் அவ்விடத்தில்; மடப்பத்தையுடைய தோழியர் குழாம் கைதொழுது இறைஞ்சினாற்போல; மிக்க காற்று மோதுதலானே ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்காநிற்கும்; தண்ணிய துறையையுடைய ஊரன் ஏனையொருத்திக்குப் பரியமளிக்க வேண்டிச் செல்லுவான் இடையே எம்மைக் காண்டலானே சிறிய வளையினையுடைய இவட்குரிய விலை இதுவென்று; தன் பெரிய தேரை அலங்கரித்து எமது முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறொரு பரத்தையின் மனையகம் நாடிச் சென்றொழிந்தனன் கண்டாய்; அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின்னே செல்லாது போரிலே பெரிய புண்ணால் அழகுபெற்ற 'தழும்பன்' என்பவனது ஊணூரிடத்துள்ள; பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றல்போல; எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றனை; வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு.

Post a Comment

0 Comments