மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு இயற்கை வேளாண்மையை மீட்கும் பொருட்டு நவீன வேளாண்மையினால் ஏற்படும் தீங்குகளையும் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதாக இத்தலையங்கம் அமைகிறது.
நவீன வேளாண்மையில் ஈடுபட்டு வரும் உழவர்களைத் திடீரென இயற்கை வேளாண்மையின் பக்கம் திசை நோக்க வைப்பது கடினம். அதற்கு அவர்கள் மத்தியில் தற்போதைய வேளாண்மையில் பயன்படும் இரசாயன உரத்தால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பாக இரசாயன வேளாண்மையால் சர்க்கரை நோய், புற்றுநோய், இரத்த அழுத்த நோய் எனப் பல்வேறு நோய்கள் உருவாகியும் பூச்சிக் கொல்லி பயன்படுத்தி நிலத்தையும் மலட்டுத் தன்மையாக மாற்றி விட்டன.
அந்தக் காலத்தில் மட்கிய சாணம், குப்பை, தழை போன்றவற்றை நிலத்திற்கு எருவாகப் போடப்பட்டதால் விஷம் இல்லா உணவும் நோயில்லா வாழ்வும் பெருவாழ்வு வாழ்ந்து வந்தனர். தற்போது நவீன வேளாண்மையில் இரசாயன கலப்பால் பெருவாழ்வின்றி இளம் மரணம் அதிகமாகி விட்டது.
சுயமான மண் பரிசோதனை முறையெல்லாம் உழவர்கள் மத்தியில் மண்ணோடு புதைந்து விட்டது. காரணம் தற்போது வேளாண்மை ஆய்வகத்தில் மண் பரிசோதனை செய்து இரசாயன உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தற்போதைய நவீன கால வேளாண்மையில் இரசாயன உரம் மற்றும் மருந்துகள் இன்றிப் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பை அழித்து விட முடியாத காரியம். அதனால் நிலமும் மலட்டுத் தன்மையாக மாறுவதே சாட்சி. மூலிகைப் பூச்சி விரட்டியைக் கொண்டு தயார் செய்து பூச்சிகளை விரட்டி அடிக்க வேண்டும்.
வேப்பிலை, நொச்சி இலை, புங்கை இலை, குப்பைமேனி இலை, துளசி இலை, அருகம்புல் இவைகளை கொண்டு தயார் செய்வதே சாணிப் பால் என்று அழைக்கப்படுகின்றன. இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரித்து அதை நிலத்தில் பயன்படுத்தினால் மனிதர்களின் உடல்நலமும் மண்ணின் உயிர்ப்புடன் பாதுகாப்பாகக் கொள்ளப்படும். மண்புழுவை உழவர்களின் தோழன் என்பர் விவசாய பெருமக்கள். உரக்குழி மூலம் மண்புழுவை இயற்கை எருவை நோக்கி ஈர்க்க வேண்டும். இக்காலத்தில் கட்டாயம் வேளாண் பெருமக்களிடம் உரக்குழி இருக்க வேண்டும். மனித உடலில் இயங்கும் இருதயம் போல் நிலம் வாழ உரக்குழி உயிர் மாதிரி.
“ உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து “
என்ற வள்ளுவ பெருமகனார் கூற்றுப்படி பசியை போக்கக் கூடிய இத்தொழில் ஓர் உயிர்த்தொழில். அந்த உயிர் தொழிலை நாம் உயிர் இழந்து விட செய்யக்கூடாது.
- முனைவர் மீ. செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
தொகுப்பாசிரியர் (ஆசிரியர் குழு - நாகூர்ப் புராணம் மின்னிதழ்)

0 Comments