Nagore Puranam
பழி சேர்க்கும் | Vol.4, Issue 6 - JUNE 2026 | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்)

பழி சேர்க்கும் | Vol.4, Issue 6 - JUNE 2026 | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்)


தன்னெஞ்சறியப் பொய்சொன்னால்

தரித்திரம் வறுமை கூடவரும்

முன்னெப் போதும் இல்லாத

முடக்கம் தயக்கம் தேடி வரும்

பன்னெடுங்காலமும் காத்துவைத்த

பரம்பரைப் புகழும் அழிந்துவிடும்

வன்முறைக்கும் அது வழிவகுக்கும்

வந்திடும் கலகமும் தலைதூக்கும்.

பொய்யென்றறிந்த பின்னாலும்

புகழ்வது மனிதர்க்கழகல்ல

மெய்யாய் முன்னோர் காத்திட்ட

முழுபுகழிருந்தால் குலைந்துவிடும்

செய்யாதவறுகள் இருந்தாலும்

சேர்ந்து வந்தே பழிசேர்க்கும்

எய்யா அம்பும் இதனாலே

இதயம் நோக்கித்தாக்கவரும்.

எத்தனை துன்பம் வந்தாலும்

இதயம் வாய்மைத்துணைகொண்டால்

வித்தாய் வளமும் துணை சேரும்

விருந்தாய் நல்லோர் நட்புவரும்

சொத்தாம் நாட்டு காந்திமகான்

சொன்ன கருத்தே

நிலையாகும் சத்தியம் போற்றி

நின்றிடுக சாந்தி மகிழ்வை வென்றிடுக.

Post a Comment

0 Comments