Nagore Puranam
கடவுளாகவும் காத்தவராயனாகவும் ! | கவிஞர் சூ. சிவராமன் | July 2026

கடவுளாகவும் காத்தவராயனாகவும் ! | கவிஞர் சூ. சிவராமன் | July 2026

பார்டர் மதுக்கடைகளின் ஷட்டர்களை

அணைத்தபடி உறங்கும்

ஒட்டுத்திண்ணைவாசி

துண்டுபீடி

எச்சில் சோறு

ஓசி குடி

எல்லாம் இன்பமயம் இவன் வசம்

கையில் வேப்பிலைக் கொத்தும்

கொப்பரைச் சட்டியுமாக

திடீர் புடீரென அவதாரமெடுப்பான்

செடில் கால் ஊன்றியபின்

கால்கள் பார்டர் தாண்டுவதில்லை

கோயில் தாழ்வாரம் உறங்கும் தலம்

பிரசாதமே பிரதான ஆகாரம்

ரோஸ் பவுடர் குங்குமத் திலகம்

ஜிகினா உடைகள்

குழந்தைகள் அழவும் சிரிக்கவும்

ஆகாயத்தில் சுற்றிவந்து

இறங்கும் தேவதூதர்

காப்பு அவிழ்த்தாயிற்று

தலைகீழாக எழுதப்பட்ட

சாராயக்கடை பதாகை

நேராகத் தெரிகிறது

வாழ்வோ அவனைச் சுழற்றுகிறது

ஒரே சமயத்தில்

கடவுளாகவும்

காத்தவராயனாகவும் !

Post a Comment

0 Comments