எட்டைய புரத்துக் கவிஞனே

என் உள்ளம் நுழைந்தவனே

உன் இல்லம் தேடி வருகிறேன்..


ஆளுக்கொரு

கோப்பைத் தேநீர் பருகி

அன்பு பேசி மகிழ்வோம்


உன் பேனாவை

எடுத்துக்காட்டு

முத்தமிட்டுக் கொள்கிறேன்


வீரமிக்க புருவங்களை

உயர்த்திக்காட்டு

அனலேற்றிக் கொள்கிறேன்..


தோள் கொடுக்கும் தோழனே

உன் முண்டாசைக் கொஞ்சம் தா

போட்டுப் பார்க்கிறேன்!!


வானமிடித்த

விடுதலை வேட்கை

கவிதைகள் காட்டு

ஒற்றிக் கொள்கிறேன்


சாதிகள் வேண்டாமென

சம்மட்டியால் அடித்தெழுதிய..

வரிகள் காட்டு

வணங்கிக் கொள்கிறேன்...


வீட்டுக்கு வந்தவனை

வெறுங்கையோடு

அனுப்பாதே தோழனே

பாஞ்சாலி சபதம்

கண்ணன் பாட்டு

குயில் பாட்டு

கொடுத்தனுப்பு

எடுத்துச் செல்கிறேன்


இன்னொரு தேநீர் தா தோழனே

பருகிச் செல்கிறேன்

காஞ்சிப் பேருந்து

வந்து விடும் .....