ஆங்கிலம் அலுவல் மொழியே | மு. முஹம்மது சுஹைப் | December 2023


நம் இந்திய திருநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இருப்பினும் ஆங்கிலேயர்களை இங்கிருந்து விரட்டினோமே தவிர அவர்களின் மொழி ஆதிக்கம் இங்கேயே தங்கி விட்டது. இதனை ஆதிக்கம் என்று சொல்வதை விட ஆங்கில மொழி தாக்கம் என்றே சொல்லலாம்.

எதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் நம் தாய் மொழியில் கற்றுக் கொள்ளலாம் அல்லது நாம் படித்து தெரிந்து மொழியில் கற்றுக் கொள்ளலாம் மாறாக நமக்கு பிடித்த மொழியை கற்று அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

மொழிக்கும் அறிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவேளை அப்படி இருக்குமேயானால் ஆங்கிலேயராக பிறந்து இங்கு வந்து தமிழ் மொழியின் மீது காதல் உற்று மொழியை கற்ற வீரமாமுனிவர் மற்ற ஆங்கிலேயர்களை விட உயர்ந்தவரா அல்லது இங்கு பல்வகையான இலக்கண இலக்கியங்களை புனைந்து கற்றுத் தேர்ந்த தமிழ் புலவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது அவர்கள் மற்றவர்களை விட தாழ்ந்தவர்களா ? . இதனை மக்கள் தெரிந்து உணர வேண்டும்.

உதாரணத்திற்கு சொல்லப் போனால் நம் நாட்டில் ஐம்பதிற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும் ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் அவரை அறிஞராகவும் அவருக்கு மரியாதை தருவதையும் இன்று நம் கண்கூடாக காண்கிறோம்.

உலகில் பதினான்கு நாடுகளைக் கைப்பற்றி பெரும்படைகளுடன் ஆட்சி செய்த தமிழ் மாமன்னன் ராஜராஜ சோழன் கூட தனது மொழியை எங்கும் திணிக்கவில்லை ஆனால் ஒரு சில நாடுகளை மட்டுமே ஆட்சி செய்த ஆங்கிலயேர்களின் மொழி இன்று ஒட்டுமொத்த உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இன்று நம் நாட்டில் ஆங்கில மொழியை கட்டாயத்தினால் பலர் கற்கின்றனர். கற்றபின் தன்னை மேதாவியாக பாவித்து கொள்கிறனர். ஆங்கிலம் ஒரு மொழி தானே இன்றி வேறு இல்லை. தமிழ், ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு என நீ எந்த மொழியை கற்றிருந்தாலும் தாய்மொழியை கற்கவில்லை யென்றால் அதுதான் அவமானம்.

சுயமாக சிந்தித்து சீரான முடிவெடுத்து பயனுற பயன்படுத்த தாய்மொழியே தகுதியானது. ஆதிக்க மொழியினும் தாய்மொழியே சாதிக்கும் என்பதனை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

- மு. முஹம்மது சுஹைப்  

Published in Nagore Puranam December month magazine 2023


Post a Comment

0 Comments