நான் கண்ட பாரதி - (தொடர் - 2)। மு. முஹம்மது சுஹைப் | November 2023

 நான் கண்ட பாரதி - (தொடர் - 2)



பள்ளிக்கூடங்கள் கோயில்களாய்:

பள்ளிக்கூடங்கள் அனைத்தும் போற்றுதலுக்குரியது என்பதனை,

" பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் "

மாந்தர்களின் மடமைகளில் நீக்கி மேன்மை பெற செய்யும் மேலான இடமான கல்விக்கூடங்கள் அனைத்தும் தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயம் போல் புனிதமான இடமாக போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

மேன்மையான கனவு:

" ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம் "

மேற்கூறப்பட்ட வரிகளில் நம் இந்திய திருநாட்டில் தரமான காகிதங்களை உருவாக்க வேண்டும் என்கிறார். மேலும் மக்களின் அறியாமையை போக்க பல பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அமைக்க வேண்டும் என்கிறார்.

வீரம் நிறைந்த பாரதம்:

" ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் "

நம் இந்திய திருநாட்டில் வாழ்பவர்கள் யாரையும் கண்ட அஞ்சி நடக்காதவராகவும் வாய்மையே பேசுபவராகவும் இருப்போம் என்கிறார். மேலும் ஏழை எளியவர்களின் துயரங்கள் நீக்க தான தர்மங்கள் பல புரிவோம் என்கிறார்.

தொழில்கள்:

" குடைகள்செய் வோம்; உழு படைகள் செய்வோம்; கோணிகள்செய் வோம்; இரும் பாணிகள் செய்வோம் "

மேற்கூறப்பட்ட இவ்வடிகளில் மலையில் நனையாமல் பாதுகாக்கும் குடைகள் பல தயாரிப்போம். இரும்பு ஆணிகள், சாக்கு பைகள் பலவும் உற்பத்தி செய்து தொழில் துறையில் சாதிப்போம். மேலும்

" நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் "

நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும் செல்லக்கூடிய பலவகையான வாகனங்கள் உருவாக்குவோம். இந்த உலகில் வாழ்பவர்கள் கண்டு அஞ்சும் வண்ணம் பல கப்பல்களை கட்டி சாதிப்போம் என்கிறார்.

வேதங்களும் விண்ணகம்:

பல சமயம் சார்ந்த வேதங்கள் பல கற்போம். செய்தற்கரிய செயல்கள் பல செய்து சூட்சுமங்களை கற்றுத் தெளிவோம் என்ற இக்கருத்தினை தனது பாடலில்

" மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் "

என்று கூறுகிறார். மேலும் வானவியல் சார்ந்த வான்மண்டலங்கள் குறித்து ஆராய்ந்து அறிவோம். கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வு குறித்தும் ஆராய்வோம் என்ற கருத்தினை

" வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் "

என்று உரைக்கிரார்.

கலையும் காவியமும்:

கலைத்துறையில் சிறப்பு பெற்று விளங்க வேண்டும் என்பதனை

" கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம் காவியம் செய்வோம்நல்ல காடு வளர்ப்போம் "

என்கிறார். மேலும் படிப்போரின் மனதை கொள்ளை கொள்ளும் இலக்கிய வகைகளில் ஒன்றான காப்பியங்கள் பல இயற்ற வேண்டும். புவியெங்கும் பசுமையாக மாறுவதற்கு மரங்கள் பல வளர்த்தும், காடுகளைப் பாதுகாத்தும் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்கிறார்.

ஒன்றிணைவோம்:

" சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகளோட்டி விளையாடி வருவோம் "

மேற்காணும் இப்பாடல் வரிகளில் காண்போரின் மனதை கவரும் வண்ணம் நிலவொளியானது ரம்மியமாய் இரவுப் பொழுதில் சிந்து நதியின் மீது வீசும். அவ்வேளையில் கேரள மாநிலம் கன்னியர்களும் இணைந்து ஆடிப்பாடி விளையாடி இனிமை நிறைந்த தெலுங்கு மொழி பாடல்கள் பல பாடி ஆனந்தமாய் பொழுதுகளை களிப்போம் என்கிறார்.

மேற்கூறப்பட்ட பாடல் வரிகளில் கேரள மாந்தர்கள் தெலுங்கு பாடல்கள் என பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாய் ஓர் தாயும் பிள்ளையாய் (பாரத தாயின் பிள்ளையாய் ) என்ற கருத்தினை தனது நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வலியுறுத்துகிறார்.

மக்கள் மேன்மை பெற பாரதி கூறிய வழி :

" சாதி இரண்டொழி வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் "

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா?

" நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர். பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருகிப் போன கருமிகள் இழிந்த சாதியினர்.

- மு. முஹம்மது சுஹைப்

Published in Nagore Puranam November month magazine 2023

Post a Comment

0 Comments