Nagore Puranam
திருநங்கை | November 2025 | பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்

திருநங்கை | November 2025 | பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்

 


நங்கை என்றால் பெண்களில் சிறந்தவள் என்றும். திருநங்கை என்றால் பெண்களில் சிறந்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதே பொருளாகும். ஆனால் இன்றோ நாங்கள் அவமரியாதைக்கு மறுப்பெயராகவும் அவமானங்களுக்கும் அலட்சியங்களுக்கும் புனைப் பெயராகவும் உள்ளோம்.

பிறந்தபோது கொஞ்சிய பெற்றோர்கள்,சேர்ந்து வளர்ந்த உடன்பிறந்தவர்கள்,கூடி விளையாடிய நண்பர்கள் என அனைவரும் சற்று வளர்ந்து தோற்றத்தில் மாறுதலைக் கண்டதும் விரட்டியடிக்கும் அவலம்.

ஹார்மோன் குறைபாட்டினால் ஆணிலிருந்து பெண்ணாக மாறிய நாங்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வலிகளை வார்த்தைகளால் கூறமுடியாது.

நாங்களும் மனிதர்களே ஆனால் எங்களை ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ அங்கீகரிக்காத சமூகம் ஆண்பாதி பெண்பாதி என்பதால் அரவானி என்றும், எங்களுக்கென்று ஒரு நம்பரை ஒதுக்கி ஒன்பது என்றும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சில ஆண்கள் எங்களைப் போன்று வேடம் தரித்து ஓடும் இரயிலிலும், வீதியில் இருக்கும் கடைகளிலும் பணவேட்டை நடத்திக் கொண்டிருகிறார்கள்.நாங்கள் இயற்கையின் சதியினால் திருநங்கையாக மாறினோம். ஆனால் இவர்களோ தெருவீதியில் பிச்சையெடுக்க திருநங்கையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களில் பலருக்கு எண்ணற்ற திறமைகள் இருந்தும் எங்களுக்கான வாய்ப்பு மட்டும் ஏனோ இன்னும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உயிர் கொடுத்த தாயோ என்னை அசிங்கம் என்று ஊரை விட்டு தள்ளி வைக்க. உயிருக்கு உயிராக வளர்த்த தந்தையோ ஊருக்கு பயந்து ஒதுங்கி நிற்க, ஒற்றி உறவாடிய சொந்த பந்தமெல்லாம் ஒன்று கூடி விரட்ட நானோ செய்வதறியாமல் தடம் மாறிபோனேனே!

எத்தனையோ பிரச்சனைகளும், வருத்தங்களும் எங்களுக்கும் இருக்க இதைப் புரிந்துக்கொள்ள மட்டும் ஏனோ நாதி ஏதும் இங்கு இல்லையே..

பிறக்கும்போது ஆணாக பிறந்த நாங்கள் குறிப்பிட்ட வயதில் பெண்ணாக மாறுவது எங்கள் குற்றமா?

இல்லை பெற்ற எங்களின் பெற்றோரின் குற்றமா? இல்லை படைத்த கடவுளின் குற்றமா?

-  பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்

Published in Nagore Puranam November month magazine 2025

Post a Comment

0 Comments