கருத்தில் கலந்த கண்ணதாசன் தொடர் - 4 | கவிஞர் பு. நல்ல பெருமாள் | August 2024

கண்ணதாசன் அவர்களின் கவிதை துளிகள் சில பின்வருமாறு:

ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன்! அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்!

வீழ்ச்சியில் கலக்கமோ! எழுச்சியில் மயக்கமோ! கொள்ளாதே அடுத்த பாதை என்ன? பயணம் என்ன? என்பது உனக்கு தெரியாது எல்லாம் இறைவனின் செயல்!

அனுபவம் என்பது வேறு ஒன்றும் கிடையாது! எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே!

மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்! கோடைவெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்! அது தேடி இது தேடி அலைகின்றாய்! - வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்! அவரவருக்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை! அறியாத மானிடருக்கு அக்கரையில் இச்சை!

சாகலாம் என்று கடலிலே விழுந்தவன் கைகள் நிறைய முத்துக்கள் உடன் திரும்புவதும் உண்டு! முத்து எடுக்க சென்றவன் செத்துப் போனதும் உண்டு! நோக்கம் உன்னுடையது! ஆக்கம் அவனுடையது!

நான் என்று நினைக்காதீர்கள்! நினைத்தால்! ஆண்டவன் தான் என்பதை காட்டிவிடுவான்!

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்! அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்! அவரவர் நிலைக்கு விலையை சொன்னான்! அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்!

பெண்களோ அழகை வாங்க வந்தார்! ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்! தலைவர்கள் புகழை வாங்கி கொண்டார்! புலவர்கள் பொய்யை வாங்கி கொண்டார்!

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்! உண்மைகள் பேசிட மொழி கேட்டார்! உறவினர் மடவார் உயிர் கேட்டார்! ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்! விலை என்ன வென்றாலும் அவர் தந்தார்! இதயம் என்பதை விலையாய் தந்து! அன்பை வாங்கிட எவரும் இல்லை!

- கவிஞர் பு. நல்ல பெருமாள்

Published in Nagore Puranam August month magazine 2024

Post a Comment

0 Comments