மாநபி நெறியும் மகாத்மா வழியும் | கவிப்பேரொளி நீரை அத்திப்பு சே அப்துல் லத்தீப் | February 2025

அநியாயத்தில் ஆட்சி செய்யும் 

அரசன் தனக்கு உண்மையினைத் 

தெரிய எடுத்துச் சொல்வதுவே 

திரு அறப்போரில் சிறப்பாகும் 

உயரிய நபிகள் பொன்னுரையை

 உணர்ந்து வாழ்வீர் நல்லோரே.

அழகே உருவாம் இறையவனே 

அழகிய வற்றில் மகிழ்கின்றான்

உலகப் பாதை காட்டியநல் 

உத்தம நபிமொழி இதுவாகும்.

ஆடைஅணிகலன் இவற்றிலெல்லாம்

அழகைக் காண முடியாது; 

தேடி யாற்றும் நற்பணியில் 

திகழும் அழகு; உண்மையிது.

காந்தி சொன்ன மொழியிதனை 

ஏந்தி உளத்தில் போற்றிடுவோம்.

மக்கள் தமக்குள் ஆராய்ந்து 

மனங்கலந் தமைத்த அரசியலே

எக்காலத்தும் நிலைபெற்ற ஏற்ற 

முஸ்லீம் அரசியலாம் இக்கருத் தென்றும்

எடுத்தோதும் இறைவசனத்தை உளமேற்போம்.

மந்திரிமார்கள் கலீஃபா போல் 

மாநபி வகுத்த அரசியலை 

முந்தி யிருந்து பின்பற்றி 

முழுமையாக வாழ்ந்திடுக என்று

சொன்னவர் காந்திமகான் 

ஏற்று நடந்து காட்டிடுவோம்.

- கவிப்பேரொளி நீரை அத்திப்பு சே அப்துல் லத்தீப் 

Published in Nagore Puranam February month magazine 2025

Post a Comment

0 Comments