அறநெறி நூல்கள்
அறிவியல் கலைகள்
அத்தனையும்படி
அன்றாடம்- உன்
ஆர்வம் என்பது
எதிலே என்பதை
அறிந்து ஆழ்ந்திடு
நன்றாகும்.
நெறிமுறையாகவே
தினமும் படிப்பதை
நினைவில் இருத்தி
செயலாற்று -உன்
நிழலும் கூடவும்
அறிவின் உயர்வில்
நிலைத்து நிற்கும்
வரவேற்று.
காலை எழுந்ததும்
படிப்பு என்றே
கற்பித்த பாரதி
சொல்போற்று- ஆம்
படிபடி என்றே
பாங்காய்ச் சொன்ன
பாவேந்தர் வழிமுறை
நீ ஏற்று.
ஓலைச் சுவடியில்
உண்மை கற்றலை
உயர்த்திச் சொன்ன
வள்ளுவரை- நீ
உணர்ந்து போற்றி
ஒவ்வொருநாளிலும்
ஓதிடு உயிரும் உள்ளவரை.
*****
பெற்ற அன்னை
புகழில் உன்னை
ஆக்கி வைத்தவள்- அவள்
புரிந்த தியாகம்
மிகுந்த சேவை
போற்றிச் செய்தவள்.
உற்றபிணிகள்
நோய்க்கெல்லாமும்
பத்தியம் இருந்தாள்- உன்
உயிரின் உடலின்
அணுவில் எல்லாம்
உன்னதம் சேர்த்தாள்.
எல்லா வகையாம்
சிறப்புக்கெல்லாம்
அன்னையே மூலம்- உன்
நல்ல குணங்கள்
வெல்லும் ஆற்றல்
அவள்தந்த தானம்.
உள்ளம் முழவதும்
அன்னை சிறப்பை
ஏற்றுபோற்றிடு- அவள்
நினைவை என்றும்
மறந்திடாமலே
புகழைப் பெற்றிடு
அடிப்படை:
உலக நாதரின்
உலகநீதி
மாதாவை ஒருநாளும்
மறக்க வேண்டாம்.
- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

0 Comments