1950 கால கட்டம் காரைக்கால் மகான் மஸ்தான் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா. காலையிலிருந்தே பல்வேறு போட்டிகள் நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிகள் நடந்தன. மாலை 7 மணிக்குக் குன்றக்குடி அடிகளார் பேச எழுந்தார். நான் காலையில் காரைக்கால் வந்ததிலிருந்து உங்கள் பள்ளி தமிழாசியரும், மாணவர் மன்றச் செயலரும் என்னை நன்றாக கவனித்து உபசரித்தனர்.
அவர்களோடு உரையாடும் பொழுது ஆசிரியரும் மாணவரும் தமிழ்ப் பற்று மிக்கவர்களாக தக்கபடி தமிழில் பேசியது எனக்கு வியப்பைத் தந்தது. காரைக்காலில் பிரெஞ்சு ஆங்கில படிப்புகளுக்கு முக்கியம் கொடுப்பதை நான் அறிவேன். இப்பள்ளியில் தமிழில் பயிற்று விப்பதோடு மாணவர்களையும் தமிழ்ப் பற்றுடையவர்களாக பரிணமிக்க வைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.
உங்கள் மாணவர் மன்றச் செயலாளர் போலவே அத்தனை மாணவர்களும் தமிழ்ப் பற்றுடையவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இப்பொழுது சில கேள்விகள் கேட்கிறேன். பதில் தெரிந்த மாணவர் எழுந்து விடையைக் கூறுமாறு கூறினார்.
மேடையில் அமர்ந்திருந்த தலைமையாசிரியர் லூர்துசாமி கணித பட்டதாரி. ஆங்கிலத்தில் அருமையாக பாடம் நடத்துவார். தமிழில் பாடம் நடத்த திணறுவார். மாணவர்கள் உலரப் போகிறார்களோ என்ற ஏமாற்றத்தில் அவரின் முகம் வெளிறியது.
மாணவர் மன்றம் செயலர், பள்ளியில் கட்டை குட்டையான இடைநிலை ஆசிரியர் நடராசனன் மாணவர்கள் மத்தியில் உட்கார வைத்தார். அடிகளார் ஆறு கேள்விகள் ஒவ்வொன்றாக கேட்டார். முதலில் எழும் மாணவனே கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னான். தவறு என்று சொல்லி அடுத்த மாணவனை அழைக்கும் அவசியமே ஏற்படவில்லை.
அடிகளார் ஆறு மாணவர் மாணவர்களையும் மேடைக்கு அழைத்து பெயரையும் வகுப்பையும் சொல்ல சொல்லி ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய் பரிசளித்தார்.
பள்ளியையும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டினார் அடிகளார். தலைமையாசிரியரின் முகம் புன்னகையில் மின்னியது.
மறுநாள் தலைமை ஆசிரியர் மாணவர் மன்ற செயலரை அழைத்து எப்படி சமாளித்தாய்? என்று கேட்டார்.
மாணவ மன்றச் செயலர் உங்களிடம் கற்ற வித்தை என்றார். தலைமை ஆசிரியரோ வாத்தியாரை விஞ்சும் சூத்திரதாரி நீ என்றார்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments