கல் உடைப்பவர்கள் கவிதையெழுதுவதில்லை
சாயும் அந்தியை விடுதலையாக காண்கிறார்கள்
சூரியனை குறியீடாக உணர்வதேயில்லை
எறும்புக் கூட்டத்தைக் மிதித்துக் கடக்கிறார்கள்
பனித்துளியை நசுக்கி உடைக்கிறார்கள்.
குவாரிகளுக்கிடையே புதுப்பாதை சமைக்கிறார்கள்
சுள்ளிகளை சோற்றுக்கு நெம்புகோலாக்குகிறார்கள்
நிலா,நட்சத்திரங்கள் ரசனைப் புள்ளியில் இல்லவே இல்லை
இளைப்பாறலுக்கான திடலாக இரவை உபயோகிக்கிறார்கள்
கல் உடைப்பவர்கள் கவிதையெழுதுவதில்லை
ஆகவே அவர்கள் கவிஞர்களில்லை.
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam May month magazine 2024

0 Comments